காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.;

Update:2025-10-11 12:00 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஒருபுறம் மின் கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு, வாகன வரி உயர்வு பத்திரப் பதிவு உயர்வு என பல உயர்வுகள் மக்கள்மீது திணிக்கப்படுவதும், மறுபுறம் சம வேலைக்கு சம ஊதியம் வழங்காமை, ஊதிய உயர்வு வழங்காமை, பதவி உயர்வு வழங்காமை, உரிய ஊதிய விகிதம் வழங்காமை, சம்பளம் வழங்காமை, வெளிமுகமை மூலம் பணி நியமனம் இன இரட்டிப்பு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகியுள்ளனர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அரசு, தனியார் மற்றும் அமைப்புசாரா பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஏதாவது ஒரு வகையில் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகிறார்கள். காலை உணவுத் திட்டம் குறித்து பெருமையாகப் பேசும் முதல்-அமைச்சர் அவர்கள், அந்தத் திட்டத்தை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அண்மையில் விரிவாக்கம் செய்தார்.

இதனைச் செயல்படுத்தும் வகையில், நூறு குழந்தைகள் உள்ள பள்ளிகளில் காலை உணவை பரிமாற ஏதுவாக, மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்திற்கு ஒரு பெண்மணியை நியமித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இவர்களுக்கான பணி நேரம் காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை என்று நிர்ணயிக்கப்பட்டதோடு, உணவைப் பெற்று, பரிமாறி அதனை சுத்தம் செய்து வைக்கும் பொறுப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பணியை கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி முதல் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

சாதாரன வீடுகளில் ஒரு மணி நேர வேலைக்கே மாதம் மூவாயிரம் ரூபாய் வரை பெண்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்ற நிலையில், நூறு பேருக்கான உணவைப் பெற்று, பரிமாறி, அவற்றை சுத்தம் செய்யும் மூன்று மணி நேர வேலைக்கு வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம் என்பது மிகவும் குறைவு.

குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வழங்க வேண்டியவர்களுக்கு ஆயிரத்து ஐநாறு ரூபாய் சம்பளம் நிர்ணயிப்பது அவர்களுடைய உழைப்பை சுரண்டுவதற்குச் சமம். அந்த குறைந்தச் சம்பளத்தையும் இரண்டு மாதங்களுக்கு மேல் வழங்காமல் இருப்பது தொழிலாளர் நலச் சட்டத்திற்கு எதிரான செயல், தனியாருக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் முன்மாதிரியாக விளங்க வேண்டிய அரசே தொழிலாளர் விரோதச் செயலில் ஈடுபடுவது சுடும் கண்டனத்திற்குரியது.

முதல்-அமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, காலை உணவுத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான சம்பளத்தை உடனடியாக தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்