தூத்துக்குடியில் காவல் துறை வாகனங்களை எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.;

Update:2025-09-04 20:43 IST

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்து சீர் செய்யுமாறும், சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தையும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தையும் இயக்குமாறு உத்தரவிட்டும், வாகனங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட எஸ்.பி. தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்றும் அவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கம் செய்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கண்காணிக்கப்படும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி அரசு வழக்கறிஞர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள், இதர துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்