தாட்கோ சார்பில் ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தாட்கோ சார்பில் ஒப்பனை, அழகுக்கலை பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ, தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattoo Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup Courses) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும்; மற்றும் 18 முதல் 35 வயதிற்குள்ளும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் ஆகும். மேலும் திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும்.
இந்த பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்த நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்த பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.