இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
நாதக நிர்வாகி துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சீமான் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்த 67 பேர் உயிரிழந்தனர்.
நேஷனல் ஹரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
சித்தராமையா தொடர்புடைய நில முறைக்கேடு வழக்கை லோக் ஆயுக்தா காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்யலாம் என கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய தொழில் முதலீடுகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்க வரும் 17ம் தேதி தமிழக அமைச்சரவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது.
அன்புமணி ராமதாஸ் உடன் கட்சி மூத்த நிர்வாகிகளான வடிவேல் ராவணன், திலக பாமா சந்தித்தனர். அன்புமணி - ராமதாஸ் இடையேயான பிரச்சினையில் திலக பாமாவை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வடிவேல் சரவணன் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை செலுத்த தவறும் மாணவர்களை பள்ளியை விட்டு வெளியே அனுப்பும் சம்பவங்களும் நடந்துள்ளன.
இதனால், பெற்றோர் அந்த பள்ளிகளுக்கு வெளியே, தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், டெல்லியில் கட்டண உயர்வு விவகாரத்தில் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, புகார்கள் பெறப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என தெரிவித்து உள்ளார்.
திருச்செந்தூரில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. அலைகள் ஆக்ரோசத்துடன் வந்து கரையை தொட்டு சென்றன. இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் திருச்செந்தூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றத்தினால், அலைகள் உயரே எழும்பின. கரையை கடந்து கடல் நீர் வந்தது. இதனால், பாதுகாப்பாக கடலில் நீராடும்படி பக்தர்களை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
கேரளாவின் கொச்சி நகருக்கு வருகை தந்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு வக்பு சட்டம் பற்றி கூறும்போது, சரியான உரிமையாளரின் ஒவ்வோர் அங்குல நிலமும் பாதுகாக்கப்படும் வகையிலான சட்டங்களை நாம் உருவாக்க வேண்டும் என்றார்.
நாங்கள் முன்பு போலவே, இந்த சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தோம். வக்புக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இது முஸ்லிம்களை இலக்காக கொள்ளப்பட்டதன்று.
முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது என கூறப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. கடந்த கால தவறுகளை திருத்தியமைப்பதற்காகவே நாங்கள் இருக்கிறோம். மக்களுக்கு நீதியை வழங்குவதற்காகவும் இருக்கிறோம் என கூறியுள்ளார்.