சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டி 10 பேர் காயம்
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.;
சிவகங்கை,
சிவகங்கை கொடிக்காடு கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் சிவகங்கை-தொண்டி சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் உள்ள மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 18 காளைகளும், 162 வீரர்களும் பங்கேற்றனர்.
காளையை 25 நிமிடத்திற்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியின்போது காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.