தாமரை மட்டுமல்ல, சூரியனும் துக்கம் கேட்கிறது - இல.கணேசன் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்
பாரதிய ஜனதா கட்சியில் ஓர் இலக்கியவாதி என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.;
சென்னை,
கீழே விழுந்ததால் தலையில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இல.கணேசன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அவர்களின் மறைவு துயரம் தருகிறது. யாரையும் புண்படுத்தாத பண்பட்ட அரசியல் தலைவர் பாரதிய ஜனதா கட்சியில் ஓர் இலக்கியவாதி. ஆன்மிக இலக்கியம் வளர்ப்பதற்காகவே பொற்றாமரை என்ற களம் கண்டவர்; என்னையும் அழைத்துப் பேசவைத்தவர்.
நாகாலாந்து வாருங்கள் காணாத இயற்கை கண்டு கவிதை எழுதலாம் என்று ஆசையோடு அழைத்தவர். உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் அவரது உரையின் திறம் பற்றிச் சொல்லிக்கரம்பற்றிப் பாராட்டினேன். மறைவு எதிர்பாராதது போய் வாருங்கள் நல்லவரே தாமரை மட்டுமல்ல சூரியனும் துக்கம் கேட்கிறது. என அதில் பதிவிட்டுள்ளார்.