காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
கோப்புப்படம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பட்டகசாலியன்விளை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன், ஆட்டோ டிரைவர். இவரது மகள் ராஸ்மின் சிந்திகா (22 வயது). இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பேசி பழகி வந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த வாலிபரிடம், ராஸ்மின் சிந்திகா வலியுறுத்தினார்.
ஆனால் அவரை திருமணம் செய்ய வாலிபர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஸ்மின் சிந்திகா மனமுடைந்து காணப்பட்டார். கடந்த சில நாட்களாக வீட்டில் யாருடனும் சரிவர பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் ராஸ்மின் சிந்திகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் போலீசில் முருகேசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.