4.5 ஆண்டுகளில் ஆணவ படுகொலைகள் வழக்குகள் பூஜ்ஜியம்; ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்
பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 509 வழக்குகள் "உண்மையற்றவை" என கூறி ரத்து செய்யப்பட்டுள்ளன.;
கடந்த 4.5 ஆண்டுகளில் (2020-2025 ஜூன்) தென் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பட்டியல் சாதி, பழங்குடியினர் (SC/ST) வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளின் விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) பதில் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தகவலை மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் கோரியிருந்தார்.
பட்டியல் சாதி, பழங்குடியினர் (SC/ST) வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளில் தென் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் மொத்தம் 3041 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக மதுரை 514 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. தேனி (465) மற்றும் புதுக்கோட்டை (440) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 509 வழக்குகள் "உண்மையற்றவை" (Mistake of fact) எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், புதுக்கோட்டை மாவட்டம் 124 வழக்குகளை ரத்து செய்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தேனி (97 வழக்குகள்) மற்றும் சிவகங்கை (74 வழக்குகள்) மாவட்டங்கள் உள்ளன.
கடந்த 4.5 ஆண்டு காலத்தில் சாதிய ஆணவ படுகொலைகள் (Honor killings) தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தென் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் சாதிய ஆணவ படுகொலை தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என ஆர்டிஐ மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தென் தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள் நடந்திருக்கக்கூடும் என்றும், அவை வழக்குகளாக பதிவு செய்யப்படாமல் வேறு காரணங்களுக்காக மறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சமூக ஆர்வளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.