கனமழை எச்சரிக்கை: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.;
கோப்புப்படம்
கடலூர்,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி. நேற்று காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை முன்னிட்டு தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுகிறது என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டார். இதனால், அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, கடலூரில் கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கையை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாகை மாவட்டத்தில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும் விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.