எச்.1 பி விசா விவகாரம்: அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்.. முன்னணி நிறுவனங்கள் வலியுறுத்தல்

எச்1-பி விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக டிரம்ப் உயர்த்தியுள்ளார்.;

Update:2025-09-20 22:49 IST

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குடியேற்றம் தொடர்பாக பல கட்டுப்பாடுகள், கொண்டு வந்தார். மேலும் விசா முறையில் பல நிபந்தனைகளை அறிவித்தார்.

அமெரிக்காவில் தங்கி பணிபுரிய வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்1-பி விசா விண்ணப்பிக்கும் முறையில் கட்டுப்பாடுகளை சில நாட்களுக்கு முன்பு விதித்தார். அதிக திறமை உள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் எச்1-பி விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) உயர்த்தி டிரம்ப் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அதன்படி உயர் திறமையான வெளிநாட்டு பணியாளர்களுக்கான திட்டத்தில் எச்-1பி விசா விண்ணப்ப கட்டணத்தை ஒரு லட்சம் டாலர்களாக உயர்த்தும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எச்1-பி விசா கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில், எச்1பி விசா வைத்திருப்போர் அனைவரும் குறைந்தது 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் வசிக்கும் ஊழியர்கள் 24 மணி நேரத்துக்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்றும் மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்