ரஷியா மீது வெறுப்பை தூண்ட ஐரோப்பிய தலைவர்கள் முயற்சி - புதின் குற்றச்சாட்டு
ரஷியாவை ஒரு அச்சுறுத்தலாக சித்தரித்து, ஐரோப்பிய மக்களிடையே வேண்டுமென்றே அச்சத்தை மேற்கத்திய தலைவர்கள் தூண்டி வருகிறார்கள் என்று புதின் கூறியுள்ளார்.;
மாஸ்கோ,
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவாக உள்ளன. இதற்கிடையே சமீபத்தில் நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட்' கூறும்போது, "நாங்கள்தான் ரஷியாவின் அடுத்த இலக்கு நாம்தான்(ஐரோப்பிய நாடுகள்). பலர் இந்த அவசரத்தை உணரவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு ரஷிய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ரஷியாவை ஒரு அச்சுறுத்தலாக சித்தரித்து, ஐரோப்பிய மக்களிடையே வேண்டுமென்றே அச்சத்தை மேற்கத்திய தலைவர்கள் தூண்டி வருகிறார்கள். ஐரோப்பா மீது ரஷியா உடனடியாகத் தாக்குதல் நடத்தப் போகிறது என்ற கருத்தை ஊக்குவிப்பதன் மூலம் மேற்கத்திய தலைவர்கள் தங்கள் குடிமக்களைத் தவறாக வழி நடத்துகிறார்கள். இது ஒரு பொய். அப்பட்டமான முட்டாள்தனம். ஐரோப்பியர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்றார்.