வெனிசுலா மீது தாக்குதல் - அமெரிக்காவுக்கு ரஷியா, ஈரான் கண்டனம்
வெனிசுலா மீதான தாக்குதலுக்கு கியூபா, கொலம்பியா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.;
மாஸ்கோ,
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல்வேறு கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம் என சூளுரைத்தார்.
இந்த சூழலில், வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. தாக்குதல் காரணமாக வெனிசுலா ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு. இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக கூறப்படும் சாக்குப்போக்குகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நம்பிக்கையின் அடிப்படையில் உறவுகளை கட்டியெழுப்புவதற்கான விருப்பத்தை விட, சித்தாந்த ரீதியிலான விரோதம் மேலோங்கியுள்ளது. வெனிசுலா மக்களுக்கு ரஷியா தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது. இதே போல், வெனிசுலா மீதான தாக்குதலுக்கு கியூபா, கொலம்பியா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.