ஆம் ஆத்மி பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை - டெல்லி மந்திரி அதிஷி கண்டனம்

ஆம் ஆத்மி கட்சியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-28 12:04 GMT

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் மே 25-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு அரசியல் கட்சியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மியின் பிரசார பாடல் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை மோசமாக காட்டுகிறது என தேர்தல் ஆணையம் கூறியதாகவும், பா.ஜ.க. தினந்தோறும் செய்யும் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை என்றும் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தவுடன் அவர்கள் மீதான வழக்குகள் மூடப்பட்டால் தேர்தல் ஆணையம் ஆட்சேபனை கூறுவதில்லை என்று தெரிவித்த அவர், பிரசார பாடலில் இதனை குறிப்பிட்டால் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று கூறினார்.

சர்வாதிகாரம் பற்றி பேசினால், இது ஆளுங்கட்சி மீதான விமர்சனம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது என்று குறிப்பிட்ட அதிஷி, பா.ஜ.க. சர்வாதிகார அரசு என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது என விமர்சித்துள்ளார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்