2வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு... அயர்லாந்து 137 ரன்கள் சேர்ப்பு

அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 46 ரன் எடுத்தார்.;

Update:2025-02-23 19:11 IST

Image Courtesy: @cricketireland

ஹராரே,

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் அயர்லாந்தும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வேவும் கைப்பற்றின. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நேற்று தொடங்கியது.

நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து அயர்லாந்தின் தொடக்க வீரர்களாக பால் ஸ்டிர்லிங் மற்றும் லோர்கன் டக்கர் களம் புகுந்தனர்.

இதில் ஸ்டிர்லிங் 1 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய ஹாரி டெக்டர் 28 ரன்னிலும், கர்டிஸ் கேம்பர் 26 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய லோர்கன் டக்கர் 46 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய நீல் ராக் 8 ரன், ஜார்ஜியா டாக்ரெல் 9 ரன், கேரத் டெலானி 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 46 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் ட்ரெவர் குவாண்டு 3 விக்கெட்டும், ரிச்சர்ட் ங்வாரா, சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்