2-வது டெஸ்ட்: பாலோ ஆனை தவிர்க்க போராடும் இந்தியா
முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 489 ரன்கள் குவித்தது.;
கவுகாத்தி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மையால் 2-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (7 ரன்), லோகேஷ் ராகுல் (2 ரன்) களத்தில்இருந்தனர். இந்த சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் - ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ராகுல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்சன் சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மளமளவென விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.
துருவ் ஜூரெல் டக் அவுட் ஆகியும், பண்ட் 7 ரன்களிலும், ஜடேஜா 6 ரன்களிலும், நிதிஷ் ரெட்டி 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். 122 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை வாஷிங்டன் சுந்தர் - குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்து காப்பாற்ற போராடி வருகின்றனர்.
பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணிக்கு முதல் இன்னிங்சில் 290 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 185 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணிக்கு இன்னும் 105 ரன்கள் தேவைப்படுகிறது.
வாஷிங்டன் 43 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.