5வது டெஸ்ட் : கருண் நாயர் அரைசதம்...முதல் நாள் முடிவில் இந்தியா 204/6
கருண் நாயர் 52 ரன்களும் , வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.;
லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் 'டிரா' வில் முடிந்தது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 4 மாற்றமாக காயமடைந்த ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்குர், அன்ஷூல் கம்போஜ் ஆகியோருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல், கருண் நாயர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் காயமடைந்த கேப்டன் பென் ஸ்டோக்சுக்கு பதிலாக ஆலி போப் அணியை வழிநடத்தினார்.
தொடர்ந்து 5-வது முறையாக 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து அணிமுதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் (2 ரன்) அட்கின்சன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.அடுத்து தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இறங்கினார். சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் (14 ரன், 40 பந்து, ஒரு பவுண்டரி) கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் போல்டானார்.
இந்தியா 2 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அதனால் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மழை கொட்டியதால் 2 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
ஆட்டம் மீண்டும் தொடங்கிய போது கேப்டன் சுப்மன் கில் (21 ரன், 35 பந்து, 4 பவுண்டரி) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். தொடர்ந்தது. சாய் சுதர்சன் 38 ரன்களில் (108 பந்து, 6 பவுண்டரி) விக்கெட் கீப்பர் ஜேமி சுமித்திடம் சிக்கினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா (9 ரன்), துருவ் ஜூரெல் (19 ரன்) நிலைக்கவில்லை.
57 ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் (43 ரன்), வாஷிங்டன் சுந்தர் (8) ஆடிக் கொண்டிருந்தனர். எக்ஸ்டிரா வகையில் இந்தியாவுக்கு 16 வைடு உள்பட 30 ரன்கள் கிடைத்தது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன், ஜோஷ் டாங்கு தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
தொடர்ந்து கருண் நாயர் , வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து நிலைத்து விளையாடினர் . சிறப்பாக விளையாடிய கருண் நாயர் அரைசதமடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது .
கருண் நாயர் 52 ரன்களும் , வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.