ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்தாகுமா..? யுஏஇ கிரிக்கெட் வாரியம் பதில்
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறுகிறது.;
image courtesy:PTI
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இதனிடையே இந்த தொடரில் திட்டமிட்ட படி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் அண்மையில் முடிவடைந்த லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்தது.
பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட இந்தியா சாம்பியன்ஸ் அணி மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அரையிறுதியிலும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழல் உருவானது. அந்த போட்டியிலும் இந்திய அணி விலகியதால் பாகிஸ்தான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.
இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை இயக்க அதிகாரியான சுபான் அகமது சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. ஆனால் ஆசிய கோப்பையை லெஜெண்ட்ஸ் லீக் போன்ற ஒரு தனியார் நிகழ்வோடு ஒப்பிடுவது சரியல்ல. ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கான முடிவுகள் எடுக்கப்படும்போது, அரசாங்க அனுமதிகள் முன்கூட்டியே பெறப்படுகின்றன. அட்டவணையை அறிவிக்கும் முடிவை எட்டுவதற்கு முன்பே அது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் இருந்ததைப் போன்ற சூழ்நிலையில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று நம்புகிறோம்” என கூறினார்.