ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜர் ஆன ராபின் உத்தப்பா
இதே வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நாளை ஆஜராக உள்ளார்.;
image courtesy:PTI
புதுடெல்லி,
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மேலும் முதலீட்டாளர்களை கோடிக்கணக்கான ரூபாய் ஏமாற்றி கணிசமான வரிகளை ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சூதாட்ட செயலிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் தற்போது ‘ஓன்எக்ஸ்பெட்’ (1xBet) என்ற சட்டவிரோத பந்தய செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் யுவராஜ் மற்றும் ராபின் உத்தப்பாவுக்கு சம்மன் அனுப்பியது.
இவர்களில் ராபின் உத்தப்பாவை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி உத்தப்பா இன்று காலை 11 மணியளவில் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதே வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
‘ஓன்எக்ஸ்பெட்’ பந்தய பயன்பாட்டின் செயல்பாடுகள் குறித்து இந்த விசாரணை நடைபெறுகிறது. இது பலரை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகவும், நேரடி மற்றும் மறைமுக வரிகளை பெருமளவில் ஏய்ப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவானை அமலாக்கத்துறை விசாரித்திருந்தது.