வம்பிழுத்த ஹாரிஸ் ரவூப்.. தரமான பதிலடி கொடுத்த அபிஷேக் சர்மா.. வைரல் வீடியோ

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 74 ரன்கள் அடித்தார்.;

Update:2025-09-22 06:48 IST

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது 5-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் வீசினார். அந்த ஓவரின் 3 பந்தை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா ரன் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஹாரிஸ் ரவூப் அவரை ஸ்லெட்ஜிங் செய்யும் விதமாக வம்பிழுத்தார். அதற்கு அபிஷேக் சர்மாவும் திருப்பி ஏதோ கூறி பதிலடி கொடுத்தார்.

பின்னர் அதே ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன சுப்மன் கில் அதை பவுண்டரிக்கு ஓட விட்டார். இதனால் ஹாரிஸ் ரவூப் ஏதோ கூற மறுமுனையில் இருந்த அபிஷேக் சர்மா கடுப்பானார். அத்துடன் ஹாரிஸ் ரவூப் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். பின்னர் நடுவர் உள்ளே புகுந்து இருவரையும் சமாதானம் செய்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்