டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியால் நீண்ட காலத்திற்கு ஆதிக்கம் செலுத்த முடியும்: கம்பீர்
டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.;
லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஹாரி புரூக் (111 ரன்), ஜோ ரூட் (105 ரன்) ஆகியோர் சதமடித்தும் பலனில்லை. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் ஒரு தொடரின் 5-வது போட்டியில் இந்தியா வெற்றி காண்பது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு இத்தகைய 17 போட்டிகளில் விளையாடி 10-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டிருந்தது. இந்த நீண்ட கால சோகத்திற்கு இந்த வெற்றியின் மூலம் இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த நிலையில் போட்டிக்கு பின்னர் ஓய்வறையில வீரர்களுடன் உரையாடிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியதாவது ,
அனைவருக்கும் வாழ்த்துகள், இந்தத் தொடர் 2-2 என நிறைவடைந்த விதம் ஒரு சிறந்த முடிவு . எனவே நாம் தொடர்ந்து சிறப்பாக வருவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நாம் தொடர்ந்து கடினமாக உழைப்போம், பகுதிகளை மேம்படுத்துவோம் . ஏனென்றால் நாம் தொடர்ந்து இதைச் செய்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக நீண்ட காலத்திற்கு ஆதிக்கம் செலுத்த முடியும் . டிரஸ்ஸிங் ரூமின் கலாச்சாரம் சிறப்பாக இருக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். என தெரிவித்தார் .