டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்த இந்திய அணி
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி இந்த சாதனையை படைத்துள்ளது.;
image courtesy:BCCI
மான்செஸ்டர்,
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதம் அடித்தனர்.
இதனையடுத்து 311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனையும் சேர்த்து நடப்பு தொடரில் இந்திய அணி 7 முறை 350+ ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக முறை 350+ ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி (3 தொடர்களில்) 6 முறை அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.