ஐ.பி.எல்.இறுதிப்போட்டி: மழை குறுக்கிட வாய்ப்பா..? தற்போதைய வானிலை அறிக்கை கூறுவது என்ன..?

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
image courtesy:IPL
image courtesy:IPL
Published on

அகமதாபாத்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. முதல்முறையாக கோப்பையை முத்தமிட இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்ட இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதனிடையே இந்த ஆட்டம் முழுவதுமாக நடைபெறுவதில் சிக்கல் நிலவுகிறது. ஏனெனில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதி சுற்று 2 ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் அந்த ஆட்டம் 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இறுதிப்போட்டியின் போதும் மழை அச்சுறுத்த வாய்ப்புள்ளதாக நேற்றைய வானிலை அறிக்கைகள் தெரிவித்தன.

இந்நிலையில் தற்போது வெளியான வானிலை அறிக்கையின் படி, அகமதாபாத்தில் இன்று மதியம் மழை பெய்ய 66 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் படிப்படியாக குறைந்து மாலைக்குள் மழை பெய்யும் வாய்ப்பு 5 சதவீதமாகக் குறையும் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் இறுதிப்போட்டி திட்டமிட்ட படி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com