விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மிதாலிக்கு கவுரவம்
மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா பெயரை சூட்ட வேண்டும் என ஸ்மிர்தி மந்தனா, கோரிக்கை விடுத்தார்;
விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு, இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய ஆந்திராவைச் சேர்ந்த மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரது பெயரை சூட்ட வேண்டும் என தற்போதைய இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஆந்திர தகவல் நுட்பத்துறை மந்திரி நாரா லோகேசுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கோரிக்கை விடுத்தார். இதை ஆந்திர அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
மிதாலி, ரவி கல்பனாவை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர் விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு சூட்டப்பட இருப்பதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் நேற்று தெரிவித்தது.
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு 12-ந்தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மிதாலி, கல்பனா பெயரிலான கேலரி திறக்கப்படுகிறது.