மழையால் ரத்தான நியூசிலாந்து - பாக். ஆட்டம்.. அரையிறுதிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின.;
கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதில் இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் 12.2 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதையடுத்து போட்டி 46 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக தொடங்கப்பட்டது.
இருப்பினும் பாகிஸ்தான் 25 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் அடித்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை நீண்ட நேரம் நீடித்ததால் இந்த ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தின் முடிவின் மூலம் நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
மற்ற 2 இடங்களுக்கு இங்கிலாந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.