துபே இல்லை.. சாம்சனுக்கு பதிலாக அந்த 2 சிஎஸ்கே வீரர்களில் ஒருவரை ராஜஸ்தான் விரும்பலாம் - ஆகாஷ் சோப்ரா கணிப்பு

சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணிக்கு மாற்ற ராஜஸ்தான் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.;

Update:2025-07-04 22:09 IST

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற உள்ளதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது. இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக சஞ்சு சாம்சன் தவறவிட்டார். சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.

முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் அவர் அடுத்த சீசனுக்கு (2026) முன்னதாக ராஜஸ்தான் அணியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் மாற்ற ராஜஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் சஞ்சு சாம்சனை நாங்கள் வாங்க பார்ப்பது உண்மைதான் என்று சிஎஸ்கே மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.

அப்படி சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கினால் அவருக்கு பதிலாக யாரை ராஜஸ்தான் அணிக்கு கொடுக்கும் என்பது பலரது மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த டிரேடிங் நடக்குமா? சிஎஸ்கே ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இது தொடர்பான பேச்சுவார்த்தை கட்டத்தை அவர்கள் எட்டவில்லை. சாம்சனுக்கு பதிலாக ராஜஸ்தான் அணி அஸ்வின் அல்லது ஜடேஜாவை விரும்பலாம்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்