சின்னசாமி மைதானத்தில் ஏ.ஐ. கேமராக்கள் பொருத்த பரிந்துரை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கூட்ட நெரிசலை தடுக்க முடியும் என்பதால் ஆர்சிபி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.;

Update:2026-01-16 19:00 IST

பெங்களூரு,

இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை வென்று அசத்தியது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு கடந்த ஜூன் 4-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பிற அலுவலர்கள் துணை முதல் - மந்திரி டி.கே. சிவக்குமாரை சந்தித்து பேசினர்.

அதன்பிறகு டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியில், சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டது.இந்த நிலையில், அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மைதானத்தில் 300 முதல் 350 ஏஐ கேமராக்கள் பொருத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்சிபி அணி முறையாக பரிந்துரை செய்துள்ளது. இதற்கான செலவு 4.5 கோடி ரூபாயை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

ஏஐ கேமராக்கள் மூலம் ரசிகர்கள் ஒரு இடத்தில் அதிகமாக கூட இருப்பதை அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கூட்ட நெரிசலை தடுக்க முடியும் என்பதால் ஆர்சிபி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்