இந்த ஆட்ட நாயகன் விருது அவருக்கு செல்ல வேண்டும் - விராட் கோலி
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.;
முல்லான்பூர்,
ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பிரம்சிம்ரன் சிங் 33 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்களும், படிக்கல் 61 ரன்களும் அடித்தனர். ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது படிக்கலுக்கு செல்ல வேண்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த போட்டியில் தேவ்தத் படிக்கல் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே என்னை பொறுத்தவரை இந்த ஆட்டநாயகன் விருது அவருக்கு சென்றிருக்க வேண்டும். அதை ஏன் எனக்கு கொடுத்தார்கள்? என்று தெரியவில்லை. நான் இந்த போட்டியில் கடைசி வரை ஒருபுறம் நின்று விளையாட நினைத்தேன். அதற்கு ஏற்றாற்போல் எதிர்புறம் இருக்கும் வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடினர்" என்று கூறினார்.