பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் சொன்னது என்ன?

இந்த வெற்றியைப் நமது ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று சூர்ய குமார் யாதவ் கூறினார்.;

Update:2025-09-15 03:15 IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்றிரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்திருந்தது.

‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 127 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும் (37 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார்.இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே அமீரகத்தை தோற்கடித்திருந்த இந்திய அணி, சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறியது. 2-வது லீக் ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தானுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

இந்திய அணி வெற்றிக்கு பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ இந்த வெற்றியைப் பரிசாகக் கருதுகிறேன். நமது ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிக்கிறோம். வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம்,  அதைப் பெற முடிந்தது. நான் எப்போதும் செய்ய வேண்டும் என்று நினைத்த ஒரு விஷயம்   என்னவென்றால் இறுதிவரை களத்தில் நின்று பேட் செய்வது. இது ஒரு சரியான தருணம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்