முதல் வெற்றியை பெறுவது யார்..? - கோவை கிங்ஸ் - திருச்சி அணிகள் இன்று மோதல்
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது.;
Image Courtesy: @TNPremierLeague
சேலம்,
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.
இதனையடுத்து இந்த தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி இரவு 7.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் திருச்சி மற்றும் கோவை அணிகள் தலா 3 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் தோல்வி கண்டுள்ளன. இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.