சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆகிறாரா ரெய்னா..? பவுலிங் கோச் சொன்ன பதில்

18-வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தை பிடித்தது.;

Update:2025-05-26 23:12 IST

image courtesy:PTI

சென்னை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றமாக செயல்பட்டு வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வருங்கால அணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தற்போதே தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக அடுத்த சீசனில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னாவை நியமிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை சென்னை - குஜராத் போட்டியின்போது வர்ணனையில் ஈடுபட்டிருந்த சுரேஷ் ரெய்னா மற்றும் ஆகாஷ் சோப்ரா ஏறக்குறைய உறுதிப்படுத்தினர்.

வர்ணனையின்போது, அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க சென்னை அணி தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரெய்னா தெரிவித்தார்.

உடனே ரெய்னாவிடம் இருந்து கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக, 'புதிய பேட்டிங் பயிற்சியாளரின் முதலெழுத்துக்கள் 'எஸ்' (S)-ல் தொடங்குமா' என்று ஆகாஷ் சோப்ரா கேட்டார்.

அதற்கு ரெய்னா, 'அவர் வேகமான அரைசதம் அடித்துள்ளார்' என்று கூறி சிரித்தார்.

ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் சுரேஷ் ரெய்னா 2-வது இடத்தில் உள்ளார். எனவே அடுத்த வருடம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் போகிறேன் என்பதை சுரேஷ் ரெய்னா மறைமுகமாக தெரிவித்ததாக சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஸ்ரீதரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "எனக்குத் தெரியாது. அவர் அப்படி சொன்னாரா என்று நான் அவரிடம்தான் கேட்க வேண்டும். உண்மையிலேயே என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. இருப்பினும் அது அணிக்கு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்