பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார் மோடி: விவசாயிகளுக்கு நிதி அளிக்கும் கோப்பில் முதல் கையெழுத்து


தினத்தந்தி 10 Jun 2024 6:44 AM GMT (Updated: 10 Jun 2024 7:50 AM GMT)

புதிய அரசின் முதல் முடிவு விவசாயிகளின் நலனுக்கான அரசின் அர்ப்பணிப்பை காட்டுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜனதா தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜனதா, இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

மோடியை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், ஜனாதிபதி திரவுபதி திர்மு மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடியுடன் 71 மந்திரிகளும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

பிரதமராக பதவியேற்ற நிலையில், இன்று தனது அலுவலகத்திற்கு சென்ற மோடி, முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரதமராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார். பிரதான் மந்திரி கிசான் நிதியின் 17-வது தவணையை விடுவிப்பதற்கான கோப்பில் மோடி கையெழுத்திட்டார்.

நாடு முழுவதும் உள்ள சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் 20 ஆயிரம் கோடி வழங்குவதற்காக மோடி கையெழுத்திட்டார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, புதிய அரசின் முதல் முடிவு விவசாயிகளின் நலனுக்கான அரசின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது" என்றார்.


Next Story