அமமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது


அமமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
x
தினத்தந்தி 14 March 2021 11:19 AM GMT (Updated: 14 March 2021 11:19 AM GMT)

அமமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. 

தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும், கூட்டணி குறித்து இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், அமமுக - தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அமமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்த கடிதத்தை பெற்று கொண்டார் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன். இன்று மாலை 6.30 மணிக்கு கூட்டணி அறிவிப்புடன் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 195 பேர் கொண்ட பட்டியல் 3 கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story