சேலத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு - 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் புகார்


சேலத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு - 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் புகார்
x
தினத்தந்தி 5 Feb 2019 10:43 PM GMT (Updated: 5 Feb 2019 10:43 PM GMT)

சேலத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போனது. இது குறித்து தற்போது புகார் கொடுக்கப்பட்டதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம்,

சேலம் சூரமங்கலம் கென்னடி தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54), தனியார் நிறுவன ஊழியர். இவர் குடும்பத்துடன் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் ஒரு மாதம் கழித்து அவர் வீடு திரும்பினார்.

அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கு பீரோவில் இருந்த 11 பவுன் நகை, மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் அவரது மனைவிக்கு அப்போது உடல் நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது. இதனால் அவர் சம்பவம் குறித்து உடனடியாக போலீசில் புகார் கூறவில்லை.

இந்த நிலையில் இளங்கோவன் நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் சங்கரிடம் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில், ‘கடந்த 2106-ம் ஆண்டு எனது வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த எனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனால் அப்போது இது குறித்து புகார் தெரிவிக்கவில்லை. எனவே எனது வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்றவர்களை கண்டுபிடிக்க வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் சூரமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story