ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த அனைவரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த அனைவரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 July 2019 10:30 PM GMT (Updated: 31 July 2019 9:10 PM GMT)

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த அனைவரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

மத்திய அரசின், ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை-சேலம் 8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள், அதன் பலன்கள், அது தொடர்பான மக்கள் கருத்து ஆகியவை குறித்த விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு கடந்த மாதம் 23-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 8 வழிச்சாலையின் முக்கிய அம்சங்கள் தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

நில உரிமையாளர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ராவ், தனஞ்செயன், வக்கீல் கே.பாலு ஆகியோர் வாதாடுகையில், “சென்னை ஐகோர்ட்டில் பல விவசாயிகள் வழக்கு தொடுத்தனர். அவர்களுடைய மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு நீதிபதிகள், “விவசாயிகள் அனைவரின் மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்றால் இந்த வழக்கு எப்படி அடுத்தகட்டத்துக்கு நகரும்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

மேலும், “கடந்த முறையே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்த அனைவரையும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரராக இணைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டோம். ஆனால் அதை நீங்கள் சேர்க்கவில்லை. எனவே, அனைவரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, புதிதாக நிலத்தை கையகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், எனவே இந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சேலத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வக்கீல் கபிலன் முறையீடு செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவின் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, அனைத்து மனுக்களையும் ஒன்றாக ஆகஸ்டு 7-ந் தேதி விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story