ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு


ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Feb 2020 9:15 PM GMT (Updated: 19 Feb 2020 9:06 PM GMT)

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டும், அரசின் நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை விளக்கியும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் பகுதியிலும் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டும், தமிழக அரசு, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் (பட்ஜெட்) சிறப்பு அம்சங்களை விளக்கியும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டங்கள் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டு கொண்டு இருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெறுகிறது.

கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்பு பேச்சாளர்கள், கலைக்குழுவினருடன் தொடர்புகொண்டு இந்த பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும்.

தலைமை கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ந் தேதியன்று அவருடைய சிலைக்கு அல்லது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகராட்சியிலும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் பகுதியிலும் நடக்கும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story