தி.மு.க.-ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது?


தி.மு.க.-ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது?
x
தினத்தந்தி 8 March 2024 4:49 AM GMT (Updated: 8 March 2024 6:23 AM GMT)

தி.மு.க.-ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கணக்கை தொடங்கிவிட்டன.

தி.மு.க. கூட்டணியை பொருத்தமட்டில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம,தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளே இப்போதும் தொடருகின்றன. எனவே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை, மற்ற அணிகளுக்கு முன்னரே தொடங்கியது.

முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கியது. இதில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதே நேரம் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடனான பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்துக்கொண்டு இருக்கிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வும் தங்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதி கேட்டதுடன், சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.

2 சுற்று பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், அந்த கட்சியின் உயர்மட்ட கூட்டம் வைகோ தலைமையில் நேற்று நடந்தது. அப்போது தி.மு.க. தரப்பில் இருந்து சாதகமான தகவல் தெரிவிக்கப்பட்டதால், ம.தி.மு.க.-தி.மு.க. இடையே உடன்பாடு எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அனேகமாக இன்று (வெள்ளிக்கிழமை) தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story