எம்.எஸ். தோனிக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன்பட்டுள்ளேன் - அஸ்வின்


எம்.எஸ். தோனிக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன்பட்டுள்ளேன் - அஸ்வின்
x

image courtesy: AFP

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகள் மற்றும் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக அஸ்வினுக்கு பாராட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த அஸ்வின் சமீபத்தில் தர்மசாலாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களம் இறங்கியதன் மூலம் 100-வது டெஸ்டில் ஆடிய 14-வது இந்தியர், முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக ராஜ்கோட் டெஸ்டில் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டை கடந்தார். இந்த மைல்கல்லை கடந்த 9-வது வீரர், 2-வது இந்திய வீரர் என்ற சிறப்பை அஸ்வின் தனதாக்கினார்.

100 டெஸ்டில் விளையாடி இருப்பதுடன், 500 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்த அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. அஸ்வின் தனது குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றார்.

அஸ்வினுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார். மேலும் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதை நினைவு கூறும் வகையில் தங்க நாணயத்தால் 500 என்று வடிவமைக்கப்பட்ட கேடயமும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் கூறுகையில், '2008-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை சேர்த்தது. அந்த நாள் எனது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. தோனி எனக்கு பல வாய்ப்புகளை வழங்கி என்னை எல்லா வழியிலும் ஊக்கப்படுத்தினார். நான் தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த நிலைக்கு வருவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி' என்று கூறினார்.


Next Story