பிரியா வாரியர் படத்தின் டைரக்டருக்கு நோட்டீசு

மலையாளத்தில் தயாரான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம் பெற்ற ‘மாணிக்க மலராயி பூவி’ பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-02-20 00:07 GMT
மலையாளத்தில் தயாரான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம் பெற்ற ‘மாணிக்க மலராயி பூவி’ பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடல் காட்சியில் புதுமுக நடிகை பிரியா வாரியர் சக மாணவனை பார்த்து கண்ணடித்தும் புருவத்தை நெரித்தும் கிறங்க வைப்பது போல் நடித்து இருந்தார். அவரது நடிப்பு இணையதளங்களில் பரபரப்பாகி தேசிய அளவில் பேசப்பட்டார். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியரை தொடர்வோர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்துள்ளது.

ஒரு அடார் லவ் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ‘டப்’ செய்து வெளியிட தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டா போட்டி நடக்கிறது. டப்பிங் உரிமை ரூ.2 கோடிக்கு விலை பேசப்படுகிறது. பிரியா வாரியருக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. அவரது சம்பளமும் உயர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் படத்துக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. ‘மாணிக்க மலராயி பூவி’ பாடல் வரிகள் இஸ்லாமியர்களை புண்படுத்துவதாக உள்ளது என்று ஐதராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மத உணர்வுகளை புண்படுத்துவதாக பாடல் உள்ளது என்று மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜின்சி போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

தணிக்கை குழுவினர் அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் யுடியூப்பில் இருந்து அதனை நீக்க வேண்டும் என்றும் சிலர் மனு அளித்தனர். போலீசார் 295ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ஐதராபாத் போலீசார் ஒரு அடார் லவ் படத்தின் டைரக்டர் ஒமர் லூலுவுக்கு நோட்டீசு அனுப்பினர். மாணிக்க மலராயி பாடல் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளது என்ற புகாருக்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்