நடிகை ஸ்ரீதேவி அஸ்தி சென்னையில் கரைப்பு

சென்னையில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கடலில் நடிகை ஸ்ரீதேவி அஸ்தியை அவரது கணவர் போனிகபூர் கரைத்தார். #Sridevi

Update: 2018-03-04 15:55 GMT

சென்னை,

இந்திய திரையுலகின் ‘கனவு கன்னி’ என வர்ணிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்தார். அங்கு தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் கடந்த 24–ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். 

 அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஸ்ரீதேவி தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் நேரிட்டது என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கி இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது உடலில் மது அருந்தியதற்கான தடயம் இருந்ததாகவும் கூறப்பட்டது. துபாய் போலீசார் ஸ்ரீதேவி கணவர் போனிகபூரிடமும், ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி பின்னர் உடலை மும்பை கொண்டுவர அனுமதி அளித்தனர்.

அதனை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவியின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன்  தகனம் செய்யப்பட்டது.  இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்தநிலையில்,  அவரது அஸ்தி கலசத்துடன் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் சென்னை வந்தனர்.  ஈஞ்சம்பாக்கம் பகுதியில் சடங்குகள் செய்து ஸ்ரீதேவியின் அஸ்தியை அவர்கள் கடலில் கரைத்தனர். 

மேலும் செய்திகள்