திரிஷா நடித்த `மோகினி' என்ன ஆனது?

திரிஷா நடித்த திகில் படம், `மோகினி.' இதில், அவர் மோகினிப்பேயாக நடித்து இருக்கிறார்.

Update: 2018-05-31 22:45 GMT
மோகினி படத்தை விஜய் நடித்த `மதுர' படத்தை இயக்கிய மாதேஷ், தயாரித்து டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்தது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. குரல் சேர்ப்பு, படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு போன்ற இறுதிக்கட்ட வேலைகளும், தணிக்கையும் முடிவடைந்து சில மாதங்கள் ஆகிவிட்டன.

என்றாலும், படம் வெளிவருவதில் தாமதம் ஆனது. இதுபற்றி டைரக்டர்-தயாரிப்பாளர் மாதேசிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:-

``மோகினி திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே படம் வெளிவந்திருக்கும். அந்த சமயத்தில், தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றதால், படத்தின் `ரிலீஸ்' தேதியை தள்ளிவைக்க வேண்டியதாகி விட்டது.

இப்போது, `மோகினி' கியூ வரிசையில் காத்திருக்கிறது. வாரத்துக்கு 4 படங்கள் வீதம் `ரிலீஸ்' ஆகி வருகின்றன. அதன்படி இம்மாதம் இறுதியில், `மோகினி' திரைக்கு வரும். இதில், திரிஷா மோகினிப்பேயாக நடித்து இருக்கிறார். கதைப்படி, அவருடைய ஆவி ஒரு நல்ல விஷயத்துக்காக போராடும். திரிஷாவின் அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ் நடித்து இருக்கிறார். `என்னுயிர் தோழன்' ரமா, இன்னொரு முக்கிய வேடத்தில் வருகிறார்.

யோகி பாபு, படம் முழுக்க வருகிறார். சிரித்து வயிறு புண்ணாகிப் போகும் அளவுக்கு அவர் `காமெடி' செய்து இருக்கிறார். ஆர்த்தி கணேஷ், மதுமிதா, சாமிநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தில், சமூகத்துக்கு தேவையான ஒரு கருத்து உள்ளது. குழந்தைகளை தைரியமூட்டி வளர்க்க வேண்டும் என்ற கருத்து அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால்தான் இது திகில் படமாக இருந்தாலும், எல்லோரும் பார்க்கும் வகையில், தணிக்கை குழுவினர் `யு' சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படத்தில், ஒரு காட்சி கூட நீக்கப்படவில்லை.'' 

மேலும் செய்திகள்