இத்தாலியில் தீபிகா படுகோனே திருமணம்: 18-ம் நூற்றாண்டு மாளிகையில் நடக்கிறது

இத்தாலியில் 18-ம் நூற்றாண்டு மாளிகையில் தீபிகா படுகோனே திருமணம் நடைபெற உள்ளது.

Update: 2018-11-02 22:15 GMT

இந்தி திரையுலகினரின் முக்கிய எதிர்பார்ப்பாக இருப்பது தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் திருமணம். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து இப்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இத்தாலியில் இவர்கள் திருமணம் நடக்கிறது. அனுஷ்கா சர்மா-விராட் கோலி திருமணமும் அங்குதான் நடந்தது.

இத்தாலியில் உள்ள லேக் கோமோ பகுதியில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இது உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இங்குள்ள ஏரி சுற்றிலும் இயற்கை அழகால் சூழப்பட்டது. அந்த பகுதியில் உள்ள டெல் பெல்பியானல்லோ என்ற பிரபல வில்லாவில் திருமணம் நடக்கிறது. இந்த மாளிகை 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். உலக பிரபலங்கள் மற்றும் பெரிய கோடீஸ்வரர்கள் திருமணங்கள் இங்கு நடந்துள்ளன.

அந்த நாட்டின் பிரதமர் கூறும்போது “திருமணங்கள் நடத்துவதற்கு இத்தாலி அற்புதமான இடம். எங்கள் கலாசாரம், விருந்தோம்பல், இயற்கை அழகு, உணவு வகைகள் பல நாட்டு மக்களையும் கவர்கிறது. இந்தி திரையுலக நட்சத்திரங்களிடம் ஏன் திருமணத்துக்கு இத்தாலியை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டால் இந்த காரணத்தைத்தான் சொல்வார்கள். சொர்க்கம் மாதிரியான எங்கள் நாட்டை ஏன் தேர்வு செய்ய மாட்டார்கள்” என்றார்.

திருமணத்துக்கு மும்பையில் இருந்து இரு வீட்டாரின் உறவினர்களும் தனி விமானத்தில் இத்தாலி செல்கின்றனர். திருமணம் முடிந்ததும் மும்பையிலும் பெங்களூருவிலும் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்