‘மாநாடு’ படத்தில் இருந்து நடிகர் சிம்பு திடீர் நீக்கம்

சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்படுவதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

Update: 2019-08-08 22:45 GMT
வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றனர். அதன்பிறகு ஜூன் மாதம் என்றனர். ஆனாலும் நடக்கவில்லை. குடும்பத்துடன் வெளிநாடு சென்ற சிம்பு சென்னை திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி, துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை.

சிம்புவின் அன்பும், நட்பும் தொடரும். இதுவரை என் மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்.”

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்