காதலன் திராவகம் வீசுவதாக மிரட்டல் ‘பேரன்பு’ பட நடிகை அஞ்சலி அமீர் புகார்

தமிழில் ராம் இயக்கிய பேரன்பு படத்தில் மம்முட்டி ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி அமீர்.

Update: 2019-12-06 00:03 GMT
திருநங்கையான இவர் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் கதறி அழுதபடி அஞ்சலி அமீர் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில், “ஒருவருடன் நான் சேர்ந்து வாழ்ந்தேன். தற்போது காதலருடனான உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்தேன். அவரோ தன்னுடன் தொடர்ந்து வாழும்படி சித்ரவதை செய்கிறார். திராவகம் வீசி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார். நான் சேமித்த பணத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ரூ.4 லட்சம்வரை பறித்துக்கொண்டார். அவரது தொல்லைகளை தாங்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் மன நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன்” என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அஞ்சலி அமீரின் காதலர் அனஸ் மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அஞ்சலி அமீர் மீது ஆசிட் வீசுவதாக நான் மிரட்டவில்லை. 2 வருடங்களாக நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம். அவருக்கு நான் உதவியாகவே இருந்தேன். இப்போது சிலரின் தவறான ஆலோசனையின் பேரில் இப்படி குற்றம் சொல்கிறார். அவருக்கு விருப்பம் இல்லையென்றால் என்னை விட்டு தாராளமாக விலகி கொள்ளலாம்” என்றார்.

மேலும் செய்திகள்