“வாழ்க்கையில் சந்தித்த கடுமையான சவால்கள்” - நடிகை காஜல் அகர்வால்

வாழ்க்கையில் தான் சந்தித்த கடுமையான சவால்கள் குறித்து நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-28 00:34 GMT

கொரோனா ஊரடங்கில் நடிகர்நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

‘’கொரோனா ஊரடங்கினால் பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. வாழ்க்கையில் எத்தனையோ கடுமையான சவால்களை எதிர்கொண்டுதான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். எந்த சந்தர்ப்பத்திலும் நெருக்கடிக்கு ஆளாகவில்லை. பிரச்சினைகளை பார்த்து வருத்தப்படவும் இல்லை. கஷ்டங்களை சந்திப்பதன் மூலம்தான் வாழ்க்கை சிறந்த பாடங்களை கற்றுகொடுக்கும் என்று நம்புகிறவள் நான். பிரச்சினைகள் வந்தால்தான் அதை நாம் கையாளும் முறையை வைத்து நமக்குள் இருக்கிற சக்தி, சாமர்த்தியம் தெரிய வரும். அதை எதிர்கொள்வதில் என்னிடம் என்ன குறை இருக்கிறது என்பதை அறிந்து அடுத்த முறை அதைவிட பெரிய பிரச்சினைகள் வந்தால் தாங்கும் மனதை பெற தயாராகி விடுவேன். இந்த ஊரடங்கில் எனக்கு எந்த மன அழுத்தமும் இல்லை. ஓய்வை ஆன்லைனில் புதியவற்றை கற்று நல்லபடியாக பயன்படுத்தினேன். எனது உணவை நானே சமைத்தேன். ஏற்கனவே படிக்க வாங்கி நேரம் இல்லாமல் ஒதுக்கி வைத்திருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக படித்தேன்.” என்று காஜல் அகர்வால் கூறினார்.

மேலும் செய்திகள்