இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்

இயக்குனர் மீது பிரபல நடிகையான மஹிமா சவுத்ரி புகார் அளித்துள்ளார்.

Update: 2020-08-13 01:58 GMT

பிரபல இந்தி நடிகை மஹிமா சவுத்ரி. இவர் சுபாஷ் கய் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பர்தேஸ் இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தில் கியா கரே, கில்லாடி 420, தேரே நாம், லஜ்ஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2006-ல் பாபி முகர்ஜி என்பவரை திருமணம் செய்து 2013-ல் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் சுபாஷ்கய் தனக்கு பலவிதங்களில் தொல்லை கொடுத்ததாக மஹிமா சவுத்ரி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இயக்குனர் சுபாஷ்கய் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார். என்னை மற்ற தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்ய விடாமல் தடுத்தார். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. என்னை வைத்து படம் எடுக்க விரும்புகிறவர்கள் அவரை தொடர்பு கொள்ள வேண்டும், இல்லையென்றால் அது ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று மிரட்டினார். அவரிடம் அப்படி எந்த ஒப்பந்தமும் நான் போடவில்லை. ராம்கோபால் வர்மா இயக்கிய படத்தில் இருந்து என்னை மாற்றிவிட்டனர்” என்றார்.

மேலும் செய்திகள்