வாழ்க்கையில் எதுவும் நடக்கும், மற்றவர்களை கேலி செய்யாதீர்கள் - நடிகை வனிதா

வாழ்க்கையில் எதுவும் நடக்கும், மற்றவர்களை கேலி செய்யாதீர்கள் என்று நடிகை வனிதா கூறியுள்ளார்.

Update: 2020-08-26 23:15 GMT
நடிகை வனிதா ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்யாத பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டது சர்ச்சையானது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்டோர் விமர்சித்தனர். அவர்களுக்கு வனிதா பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் பீட்டர் பாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து வனிதா சமூகவலைத்தளத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

‘’கடவுள் இந்த சோதனையை கொடுத்துள்ளார். ஆனாலும் அதிசயம் நடக்கும் என்று நம்புகிறேன். அவர் எனக்காகவும், நான் அவருக்காகவும் இருக்கிறோம். நான் கடவுளை நம்புகிறேன். எங்கள் காதல் வலிமையானது. திருமணம் என்பது சட்ட ரீதியிலானது மட்டும் இல்லை. அது இரு இதயங்களை ஒன்று சேர்ப்பது. வாழ்க்கையை சேர்ந்து கொண்டாட வைப்பது. பலருக்கு திருமணமும் விவாகரத்தும் வெறும் துண்டு காகிதமாக இருக்கலாம்.

வாழ்க்கை குறுகியது. கடவுளை நம்பும்போது அவர் நேசிப்பார். நான் கடவுளோடு வலுவான தொடர்பில் இருக்கிறேன். மற்றவர்கள் பாதையில் கவனம் செலுத்துவதை நிறுத்துங்கள். வாழ்க்கையை யாரும் கணிக்க முடியாது. எப்போதும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எனவே உங்கள் வாழ்க்கையை சரியானது என்று நினைத்து மற்றவர்களை கேலி செய்யாதீர்கள்.”

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்