லண்டனில் இருந்து வந்தாலும் எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை - நடிகை ஹர்ஷிகா பூனச்சா சொல்கிறார்

லண்டனில் இருந்து வந்தாலும் எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என நடிகை ஹர்ஷிகா பூனச்சா தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-23 00:27 GMT
பெங்களூரு, 

பிரபல கன்னட நடிகையாக இருப்பவர் ஹர்ஷிகா பூனச்சா. இவர் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். கடந்த 4-ந்தேதி தான் அவர் லண்டனில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து லண்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்த நாடு அறிவித்துள்ளது. இதனால் இங்கிலாந்துக்கான விமான சேவையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை ஹர்ஷிகா பூனச்சா, லண்டனில் இருந்து வந்ததால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என கருதப்பட்டது. மேலும் அவர் கடந்த 18-ந்தேதி வரை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதனால் அவர் மூலம் புதிய வகை கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் பரவக்கூடும் என தகவல் பரவியது.

இதுகுறித்து நடிகை ஹர்ஷிகா பூனச்சா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், லண்டனில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. ஆனால் நான் அந்த வைரஸ் பரவுவதற்கு முன்பே லண்டனில் இருந்து பெங்களூருவுக்கு வந்துவிட்டேன்.

புதிய வகை கொரோனா பாதிப்போ, சாதாரண கொரோனா பாதிப்போ இல்லை. எனக்கு எந்த வகையான கொரோனா பாதிப்பும் இல்லை. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். என்னை பற்றி யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம் என்றார்.

மேலும் செய்திகள்