சமூகத்தின் மீது சூர்யா காட்டும் கருணை பாராட்டுக்குரியது - டைரக்டர் ஷங்கர்
ஜெய்பீம் திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா மற்றும் டைரக்டர் த.செ. ஞானவேலுக்கு டைரக்டர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
டைரக்டர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஜெய்பீம் திரைப்படத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும், திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது, டைரக்டர் ஷங்கர் ஜெய்பீம் திரைப்படத்தின் டைரக்டர் த.செ. ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யாவை பாராட்டி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், 'ஜெய்பீம் திரைப்படம் குரலற்றவர்களுக்கான குரல். இயக்குனரின் நுணுக்கமான மற்றும் யதார்த்தமான அணுகுமுறை பாராட்டுக்குரியது.
திரைப்படத்தைத் தாண்டி நடிகர் சூர்யாவின் தாக்கமான நடிப்பு, சமூகத்தின் மீது அவர் காட்டும் கருணை உண்மையில் பாராட்டுக்குரியது. சக்தி வாய்ந்த படங்கள் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
#JaiBhim A Voice for the Voiceless. Director’s detailing &realistic approach was nerve-racking &commendable.Beyond the film & his impactful acting, @Suriya_offl ‘s compassion towards society is really laudable. It’s been proven again,that powerful films can bring enormous change.
— Shankar Shanmugham (@shankarshanmugh) December 10, 2021