மகனுடன் சேர்ந்து வாலிபரை தாக்கிய நடிகை: போலீசில் புகார்

நடிகை ராதா மகனுடன் சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

Update: 2024-03-21 05:01 GMT

சென்னை,

'சுந்தரா டிராவல்ஸ்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதா. இவர், தனது மகன் தருணுடன் சென்னை சாலிகிராமம், லோகையா காலனியில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் ரிச்சர்ட் (வயது 22). இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்சிஸ் ரிச்சர்ட் தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நடிகை ராதா, தனது மகன் தருணுடன் சேர்ந்து பிரான்சிஸ் ரிச்சர்ட்டிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதால் இருவரும் சேர்ந்து பிரான்சிஸ் ரிச்சர்ட்டை கையாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரான்சிஸ் ரிச்சர்ட் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார் நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருணிடம் விசாரித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் நடிகை ராதா, தன்னை பிரான்சிஸ் ரிச்சர்ட் கிண்டல் செய்ததாக விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் பிரான்சிஸ் ரிச்சர்ட், தனது உறவினர் ஒருவருடன் ராதா வீட்டுக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தார்.

பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர். ஆனால் அதன்பிறகு பிரான்சிஸ் ரிச்சர்ட், நடிகை ராதாவை பற்றி அவதூறாக பேசியதாகவும், அதனால் தனது மகனுடன் சேர்ந்து அவருடன் வாக்குவாதம் செய்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்