செண்டிமென்ட் பார்க்கும் பிரியதர்ஷன்

இந்தியர்களை அடிமையாக்கி ஆளும் எண்ணத்தோடு, ஆங்கிலேயர்கள் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த இடம் கேரளம். அங்கு வாஸ்கோடாகாமாவின் அராஜகத்தை எதிர்த்து, குஞ்சாலி மரக்காயர்கள் போரிட்டனர்.

Update: 2019-10-11 15:59 GMT
4 மரக்காயர்களில், 4-வது மரக்காயரின் வரலாற்றை மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இதற்கு ‘மரக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் மரக்காயராக மோகன்லால் நடிக்கிறார். 

தவிர இந்தப் படத்தில் தமிழ் நடிகர்களான பிரபு, அர்ஜூன், அசோக்செல்வன், பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி, கன்னட நடிகர் சுதீப், மஞ்சுவாரியர், முகேஷ், நெடுமுடிவேணு, மோகன்லாலின் மகன் பிரணவ், பிரியதர்ஷனின் மகள் கல்யாணி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். 

இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்திற்கான டிரைலர் உருவாக்கும் பணியில் பிரியதர்ஷன் ஈடுபட்டிருக்கிறாா். படத்தில் எடிட்டர் பணியை எம்.எஸ்.அய்யப்பன் நாயர் செய்தாலும், டிரைலர் உருவாக்கும் பணியை மட்டும், ‘பிரேமம்’ படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனிடம் கொடுத்திருக்கிறாராம், பிரியதர்ஷன். 

இதற்கு முன்பு மோகன்லாலை வைத்து ‘ஒப்பம்’ என்ற படத்தை பிரியதர்ஷன் இயக்கியபோது, அந்தப் படத்திற்கான டிரைலரை உருவாக்கிக் கொடுத்தவர் அல்போன்ஸ் புத்திரன்தான். அந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்ததன் விளைவாக, படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு, 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதே போல் ‘மரக்கார்’ படமும் வெற்றிபெறும் என்ற செண்டிமென்ட் அடிப்படையில் அல்போன்ஸ் புத்திரனிடம் படத்திற்கான டிரைலரை உருவாக்கச் சொல்லியிருக்கிறாராம், பிரியதர்ஷன்.

மேலும் செய்திகள்